2 மகள்களுக்கு தாயே விஷம் வைத்து கொலை!
மணப்பாறை அருகே குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர் கனகராஜ்.கட்டட தொழிலாளியான இவர் தனது மனைவி சாந்தம், இரு மகள்கள் ,ஒரு மகன் மற்றும் சகோதரர்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கனகராஜின் 13 வயது மகளான கோகிலாவும், பதினொரு வயதாகும் லலீதாவும் மயங்கிய நிலையில் கடந்த திங்கள்கிழமை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் தவறுதலாக எலி மருந்தை கொண்டு பல் துலக்கி யதாக கூறப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையடுத்து திடீர் திருப்பமாக இரு குழந்தைகளின் தாயான சாந்தம் மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்தார். தனது கணவரின் சகோதரரின் பணத்தை தனது மகள்கள் அடிக்கடி திருடி வந்ததாகவும் இது வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும் என்ற அச்சத்தில் குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாகவும் சாந்தம் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவரை காவலர்கள் கைது செய்தனர்.







