நிர்பயா வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு!
நிர்பயா பாலியல் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையில் முகேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஞ்சனா பிரகாஷ் கடந்த 16ம் தேதி கருணை மனு தாக்கல் செய்யப் பட்டதாகவும், 17ஆம் தேதியே அந்த மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.
எதையும் ஆராயாமல் முகேஷின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளதாக வாதிட்ட அஞ்சனா பிரகாஷ், உரிய ஆவணங்களும், தீர்ப்பு நகல்களும் அவருக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆவணங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதாகவும் அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் கூறினார்.
ஆவணங்கள் அடிப்படையிலேயே கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததாகவும் இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல என்றும் அதனை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு தீர்ப்பு இன்று அளிக்கப்படும் என்று தெரிவித்தது.






