புதிய ராணுவ தளபதி பொறுப்பேற்ற மறுநாளே எல்லையில் தீவிரவாதிகள் அட்டூழியம்..! 2 இந்திய வீரர்கள் வீர மரணம்!!
ஜம்மு -காஷ்மீரில் ஊடுருவிய பாக். தீவிரவாதிகளை வேட்டையாட நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைந்தனர். எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் முகுந்த் நரவானே நேற்று பொறுப்பேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரவானே, எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் பிரச்னை தொடர்ந்தால், அவர்கள் எங்கிருந்தாலும் தாக்குவதற்கான உரிமை இந்தியாவிற்கு உள்ளது என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடும் வகையில் கூறியிருந்தார்.
புதிய ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்து 12 மணி நேரம் கூட கடக்காத நிலையில், பாக். தீவிரவாதிகள் இன்று காலை ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நவ்சோரா என்ற இடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை, இந்தியப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
பல மணி நேரமாக நீடித்து வரும் இந்தச் சண்டையில், இந்திய வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டுப் பகுதியில் மறைந்திருந்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகளை வேட்டையாட இந்தியப் படையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




