“கட்சியை பதிவு செஞ்சாச்சு ; பொது சின்னம் கொடுங்க” – மாநில தேர்தல் ஆணையத்தில் அமமுக மனு!!
தலைமை தேர்தல் ஆணையத்தில் அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்து விட்டதால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் பொது சின்னம் ஒதுக்கக் கோரி மாநில தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கிய டி.டி.வி. தினகரனுக்கு, கடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது தனது கட்சிக்கு பொது சின்னம் பெறுவதற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டியதாகிவிட்டது. கட்சியை பதிவு செய்யாததால், பொதுச் சின்னம கிடையாது என் தேர்தல் ஆணையம் கறாராக கூறிவிட்டது. கடைசியில் கட்சியை பதிவு செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் உறுதி மொழி கொடுத்ததால், பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து தினகரன் தரப்பில் அமமுக கட்சியை பதிவு செய்யும் பணிகளில் மும்முரம் காட்டினர். அமமுக கட்சிக் கொடியில் ஜெயலலிதா படம் இடம் பெற அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அமமுகவில் இருந்து வெளியேறிய பெங்களூரு புகழேந்தியும், கட்சியை பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், கட்சியை விட்டே விலகிய பின் அக்கறை ஏன்? என புகழேந்தியை கண்டித்ததுடன், அமமுகவை கட்சியாக பதிவு செய்ய பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதனால் அமமுக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக கடந்த சனிக்கிழமை அறிவிப்பு வெளியானது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு பொது சின்னம் வழங்க வேண்டும் என அமமுக சார்பில், தமிழக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தங்கள் கட்சிக்கு எந்த சின்னத்தை தமிழக தேர்தல் ஆணையம் ஒதுக்கப் போகிறது? என்ற எதிர்பார்ப்பும் அமமுகவினரிடையே எழுந்துள்ளது.





