மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.2,500 அதிகரித்து வழங்குவது குறித்து பதில்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது தவெக தலைவர் விஜய், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம், மகளிருக்கு மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பேருந்து சேவை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய முதலமைச்சராக பதவியேற்ற விஜய், முதல் கையெழுத்து மகளிருக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்குவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 3 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.
கடந்த அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படும் என விஜய் உறுதி அளித்தார். மேலும், மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறு சீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவை என்றும் கூறினார். அதே நேரம் மே மாதத்திற்கான உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என உத்தரவிட்டார்.
அதன்படி, மே மாதத்திற்கான உரிமைத்தொகை ரூ.1000 இன்று வரவு வைக்கப்பட்டது. இருப்பினும் விஜய் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் மாதம் 2500 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்படும் என கூறி இருந்த நிலையில், அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தனது தொகுதியான திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொதுமக்களின் எதிர்பார்ப்பான அனைத்து ரேஷன் அட்டைத்தார்களுக்கும் ரூ. 2500 மகளிர் உரிமை தொகை வழங்கப்படுமா என்று கேள்விக்கு பதிலளித்து அவர் பேசும்போது, “ஒவ்வொரு துறை ரீதியாகவும் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பெரிய நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் பட்ஜெட்டிற்கு பிறகே பண்ண முடியும். அதற்குள் தேவையான நிதி ஆதாரங்களை முதல்வர் சரி செய்வார். ஒரு அரசாணையில் இதனை சரி செய்ய முடியாது. நிதி ஆதாரங்களை சரி செய்து பட்ஜெட்டிற்கு பிறகே மகளிர் உரிமைத் தொகை ரூ. 2500 அதிகரித்து வழங்கும் திட்டத்தை முடிவெடுத்து கொண்டுவர முடியும்.” என்று பேசினார்.





