சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவர்கள் அவற்றை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான results.cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகியவற்றில் அறிந்துகொள்ளலாம். இந்த ஆண்டு சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் நிலையில், டிஜிலாக்கர் மற்றும் உமாங் போன்ற அரசு செயலிகளும் முடிவுகள் விரைவில் வெளிவரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ இரண்டு வாரியத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பிப்ரவரி 17 முதல் மார்ச் 11, 2026 வரை நடைபெற்ற முதல் வாரியத் தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமானது. தற்போது இதன் முடிவுகளே வெளியாக உள்ளன. இரண்டாவது வாரியத் தேர்வு விருப்பத்தேர்வாக வழங்கப்படுகிறது.
மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக்கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். இந்த இரண்டாவது தேர்வு மே 15 முதல் ஜூன் 1, 2026 வரை நடைபெற உள்ளது. பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இன்றி நடத்தப்படும் இத்தேர்வில், அதிகபட்சமாக மூன்று பாடங்களில் மதிப்பெண் மேம்பாட்டிற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல் தேர்வில் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ‘கம்பார்ட்மென்ட்’ பிரிவில் வைக்கப்பட்டு, அவர்கள் இந்த இரண்டாவது தேர்வில் பங்கேற்கத் தகுதி உடையவர்கள் ஆவர்.
ஆனால், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியுற்ற அல்லது தேர்வுக்கு வராத மாணவர்கள் இரண்டாவது தேர்வை எழுத முடியாது. அவர்கள் 2027-ஆம் ஆண்டு நடைபெறும் முதன்மைத் தேர்வில் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 25,08,319 மாணவர்கள் தேர்வு எழுதப் பதிவு செய்திருந்தனர். இதில் 14,08,546 மாணவர்களும், 10,99,773 மாணவிகளும் அடங்குவர்.
நாடு முழுவதும் 8,075 தேர்வு மையங்களில் 83 பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டன. கடந்த 2025-ஆம் ஆண்டு மே 13 அன்று முடிவுகள் வெளியான நிலையில், அப்போது 93.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிலாக்கர் தளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வாரியம் அறிவுறுத்தியுள்ளது.





