--- --:--:-- --

பெண்களுக்கு வாக்குறுதிகளை வாரி வழங்கும் அரசியல் கட்சிகள்..!

2

மிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. 234 தொகுதிகளில் 214 தொகுதிகளில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, பெண் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதாவது, வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் மாதாந்திர உதவித்தொகை வரை தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகின்றனர்.

 

ஆனால், இந்த அக்கறை தேர்தலில் பெண்களை முன்னிலைப்படுவதில் இல்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில், 46 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூடப் போட்டியிடவில்லை என கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் மொத்தம் 4,023 வேட்பாளர்களில், 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள் மற்றும் வில்லிவாக்கம் தொகுதியில் ஒரு மூன்றாம் பாலினத்தவர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மொத்தமாக, 46 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களே இல்லை. அதே சமயம் 63 தொகுதிகளில் தலா ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே உள்ளனர். சுமார் 60 தொகுதிகளில் இரண்டு பெண் வேட்பாளர்கள் மட்டுமே உள்ளனர். எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் போன்ற தலைவர்கள் போட்டியிடும் கரூர் மற்றும் விருத்தாச்சலம் போன்ற தொகுதிகளில் தலா 5 முதல் 6 பெண் வேட்பாளர்கள் உள்ளனர்.

 

தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் 25 பெண் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது. அதாவது, தி.மு.க -19, காங்கிரஸ் -2, வி.சி.க -2, சி.பி.எம் -1 மற்றும் தே.மு.தி.க -1 பெண் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் 28 பெண் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. அதன்படி, அ.தி.மு.க -20, பா.ஜ.க -5, பா.ம.க -3 பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

 

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 23 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதற்கு முற்றிலும் மாறாக, சீமானின் நாம் தமிழர் கட்சி, தனது கொள்கையின்படி 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது. இந்த முறை அக்கட்சி 116 பெண்களையும், ஒரு திருநங்கையையும் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளில், நான்கு முக்கியக் கூட்டணிகளும் பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

மாநிலம் முழுவதும் பல தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் இல்லாத நிலை நீடிக்கிறது. இதில் மாநிலத் தலைநகரைச் சுற்றியுள்ள கும்மிடிப்பூண்டி, திருத்தணி, திருவள்ளூர், ஹார்பர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் அடங்கும். மதுரையில் உள்ள நான்கு தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்கள் எவரும் இல்லை.

 

இதுபோன்று, திருப்போரூர், சோளிங்கர், அணைக்கட்டு, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி, கீழ்பெண்ணாத்தூர், செய்யார், செஞ்சி, திண்டிவனம், திருக்கோவிலூர், ஓமலூர், சேலம் (மேற்கு), கூடலூர், பல்லடம், கோவை (தெற்கு), பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், ஸ்ரீரங்கம், திருச்சி (கிழக்கு), நெய்வேலி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், வேதாரண்யம், மன்னார்குடி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, ஆலங்குடி, விருதுநகர், அருப்புக்கோட்டை, ராமநாதபுரம், ஸ்ரீவைகுண்டம், அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை மற்றும் கிள்ளியூர் ஆகிய தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்கள் இல்லை.

 

அரசியல் கட்சிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட முக்கியத் தொகுதிகளில் மட்டுமே பெண் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. இதனால், மாநிலம் முழுவதும் சீரான பிரதிநிதித்துவம் என்பதற்குப் பதிலாக, சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக உள்ளது

.

Leave a Reply

Right Menu Icon