நாடு முழுவதும் ரமலான் நோன்பு தொடக்கம்..!
தமிழ்நாட்டில் ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கபட்ட நிலையில், நாகூர் மற்றும் மதுரையில் நேற்றே இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர். ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி, நேற்று மாலை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ரமலான் நோன்பிற்கான பிறை தெரிந்தது. அதைத்தொடர்ந்து, இன்று முதல் புனித ரமலான் மாதத்தின் நோன்பு தொடங்குவதாக அரசின் தலைமை காஜி முஃப்தி உஸ்மான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
புனிதமான இந்த மாதத்தில் அனைவரும் நோன்பு இருந்து, இறை அருளைப் பெற இஸ்லாமியப் பெருமக்களை வாழ்த்துவதாகவும் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நேற்றிரவு சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. நாகை மாவட்டம் நாகூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவில் நடைபெற்ற தாராவீஹ் சிறப்பு தொழுகயில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
மதுரை மாநகரில் மகபூப்பாளையம், நெல்பேட்டை, அண்ணாநகர், வள்ளுவர்காலனி, கலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் இரவு நேர சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது உலக நன்மைக்காக பிராத்தனை செய்தனர்.





