இன்று வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!
வங்கக் கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவியது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள இந்தியப் பெருங்கடலில் இன்று வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும், நாளை மறுதினம், கடலோர தமிழ்நாடு, தென்தமிழக உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 21-ஆம் தேதி மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளில் இன்றும், நாளையும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





