--- --:--:-- --

சிங்கப்பூரிலிருந்து பொங்கலுக்கு வந்தவர் விபத்தில் பலி: செங்கமடை கிராமமே சோகத்தில் மூழ்கியது

IMG-20260115-WA0057
  • ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள செங்கமடை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சரவணன் (35). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் இவர் சிங்கப்பூரிலிருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

 

தனது மகன் தீரனுடன் மோட்டார் சைக்கிளில் மதுரை – கொச்சி சாலையில், கல்லூர் அருகே சின்னக்கீரமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சின்னக்கீரமங்கலத்தைச் சேர்ந்த செபஸ்தியான் என்பவர் ஓட்டி வந்த வாகனம், எதிர்பாராதவிதமாக சரவணனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

 

​இந்த விபத்தில் சரவணனுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் திருவாடானை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

​வெளிநாட்டிலிருந்து பொங்கல் கொண்டாட வந்த இளைஞர், வந்த இரண்டே நாட்களில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் செங்கமடை கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Right Menu Icon