மகளிர் உலகக்கோப்பை : இந்தியா – ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை
மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் போட்டி கிரிக்கெட்டில் இந்தியா பங்கேற்கும் அரையிறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் 2வது அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது.
மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இரவுப் பகலாக இப்போட்டி நடைபெறுகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில், ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் ஆஸ்திரேலியா அணி வலுவான நிலையில் உள்ளது. அதேநேரத்தில், இந்திய அணி 3 போட்டிகளில் மட்டுமே வென்று, கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதிப் பெற்றது.
லீக் போட்டியின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் குவித்தபோதும் தோல்வியை தழுவியது. இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நல்ல பார்மில் உள்ள நிலையில், காயம் காரணமாக மற்றொரு தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல், விலகி உள்ளது சற்றே பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதில் அணிக்கு திரும்பியுள்ள சாபலி வர்மா, அதிரடியை காட்டுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பந்துவீச்சிலும் இந்திய அணி சற்றே கவனம் செலுத்தினால் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இதனிடையே மும்பையில் இன்று மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டம்கைவிடப்பட்டால், ஏற்கனவே பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.






