பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் காலமானார்!
பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சகோதரும், இசையமைப்பாளருமான சபேஷ் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 68. தமிழ் சினிமாவில் தன்னுடைய சகோதரர் தேவாவுடன் உதவியாளராக, பணியாற்றி தன்னுடைய இன்னொரு சகோதரரான முரளியுடன் இணைந்து சபேஷ் – முரளி என்ற பெயரில் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்.
இவர்கள் தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர். அதேபோல் ஆட்டோகிராப் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சபேஷ் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சபேஷ் – முரளியின் இசை தொடக்கம் என்பது கடந்த 2001-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘சமுத்திரம்’ படம் தான். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர்களாக அறிமுகமான சபேஷ் – முரளி, அடுத்து ’நைனா’, ‘பாறை’, ‘அயோத்யா’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அதேபோல ‘ஜோடி’ படம் தொடங்கி, ‘பாரிஜாதம்’, ‘தலைமகன்’, ‘அரசாங்கம்’, ‘சிந்து சமவெளி’, ‘அன்னக்கொடி’, ‘கொடி வீரன்’, ‘திருமணம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு பின்னணி இசையமைத்துள்ளார்.





