தவெக தலைவர் விஜய் முக்கிய அறிவுறுத்தல்!
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை தவெக தலைவர் விஜய், நேரில் அழைத்துப் பாராட்டி, பரிசு வழங்கி வருகிறார். அந்த வகையில் மூன்றாம் ஆண்டாக இந்த ஆண்டும் அந்நிகழ்ச்சியை நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டு, அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடத்தைப் பிடித்த மாணவர்களை நேரில் அழைத்து தவெக தலைவர் விஜய் பாராட்டி பரிசு வழங்குவதை கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செய்தார். அதேபோல், இந்த ஆண்டும் மாணவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்துகிறார்.
இதில், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள்.முதல் ஆண்டு ஒரு நாளிலும், கடந்த ஆண்டு இரண்டு நாட்களாகவும் கல்வி விருதை நடத்தினார் விஜய். இந்த நிலையில் இந்த ஆண்டு 3 நாட்களாக நடத்துகிறார். முதற்கட்டமாக கள்ளக்குறிச்சி, அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகளில் இருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை அழைத்து ஊக்கத்தொகை வழங்குகிறார் விஜய்.இதற்கான ஏற்பாடுகளை தவெக தீவிரமாகச் செய்துவரும் வேளையில், அக்கட்சியின் தலைவர் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மாமல்லபுரத்தில் நாளை (30ஆம் தேதி) நடைபெறும் மாணவர்களுக்கான பாராட்டு விழாவில், கட்சி விளம்பரப் பதாகைகள் வைக்க வேண்டாமென தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.





