தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்..!
2025-26 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காலை 9.30 மணிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், திமுக அரசின் முழுமையான பட்ஜெட் இதுவாகும். எனவே புதிய அறிவிப்புகள், சலுகைகள் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அது உயர்த்தப்படுமா, பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகையை ரூ.2000 ஆக உயர்த்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
திமுக அரசு இதுவரை நான்கு நிதிநிலை அறிக்கைகளை தக்கல் செய்துள்ளது. அவற்றில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது ஆனால் எல்லாம் அறிவிப்புகளாகவே உள்ளது.கல்வி, மருத்துவம், சமூகநீதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. அறிவிப்புகள் அரசு ஆனையுடனே நிற்கிறது. மொத்தத்தில் இந்த அரசு அறுவிப்புகளை வெளியிடும் அரசாக உள்ளது.
2021ஆம் ஆண்டு தேர்தலின் போது 505 வாக்குறுதிகளை அளித்தது அவற்றில் இதுவரை பத்து விழுக்காடுக்கூட நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது என குற்றம் சாட்டுகிறேன் என்றார்.புதுவை அரசு மகளிருக்கான உதவி தொகையை 2500 ரூபாயாக உயர்த்தியுள்ளது இது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு மட்டும் தான் மாத உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாட்டில் அனைத்து குடும்ப தலைவிக்கும் மாத உரிமை தொகை வழங்க வேண்டும். இதனை இரண்டாயிரமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்திகிறேன் என்றார்.






