தீபாவளிக்கு முந்தைய நாளும் பொது விடுமுறை?
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இது வியாழக்கிழமை என்பதால், பிறகு வெள்ளி ஒரு நாள் வேலை நாளாகவும் அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை என்பதாலும், சொந்த ஊர் செல்பவர்கள் வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்று தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 1ம் தேதி விடுமுறை அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்களுக்கும் நவம்பர் 1ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9-ம் தேதி வேலை நாளாக செயல்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், வியாழன் (தீபாவளி), வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளித்ததற்கு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.






