நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் வழக்கு..!

டிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்டோர் மீது எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு வழங்கப்படும் நிலையில், மலையாளம், தெலுங்கு, தமிழ் திரையுலகில் நடித்துக் கொண்டிருந்த பிரபல நடிகையை, கேரளாவில் காரில் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் கேரளாவை மட்டுமல்ல நாட்டையே உலுக்கியது.

 

2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி இரவில் அந்த நடிகை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் சென்ற ஒரு கும்பல், நடிகையின் காரின் பின்புறத்தில் மோதியுள்ளனர்.

 

இதனால், காரை நிறுத்தி இருதரப்பும் வாக்குவாதம் செய்தபோது, வலுக்கட்டாயமாக நடிகையின் காருக்குள் அந்த கும்பல் நுழைந்தது. அந்த கும்பலை வழிநடத்திய பல்சர் சுனில், நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், நடிகையை மிரட்டுவதற்காக அதை செல்போனில் வீடியோ பதிவு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

இப்படி, திருச்சூர் – எர்ணாகுளம் தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு அந்த நடிகை கும்பலிடம் சிக்கி தவித்ததாக FIR-இல் கூறப்பட்டுள்ளது. சினிமா பாணியில் வன்கொடுமையை அரங்கேற்றிய அந்த கும்பல், இறுதியாக இயக்குநர் ஒருவரின் வீட்டின் முன்பு நடிகையை இறக்கிவிட்டுவிட்டு தப்பியது.

 

தனக்கு நடந்த துன்புறுத்தல் குறித்து, அந்த நடிகை தைரியமாக காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த நடிகையின் முன்னாள் ஓட்டுநரான பல்சர் சுனில் உள்ளிட்ட சிலரை கைது செய்து விசாரித்தனர். இந்நிலையில், சிறையில் இருந்தவாறு மலையாள நடிகர் திலீப்புக்கு, பல்சர் சுனில் எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கு முழுவதுமாக வேறு திசைக்கு திருப்பிய அந்த கடிதத்தால் மலையாள திரையுலகமே அதிர்ந்தது.

 

இதன் பின்னர், நடிகைக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தலில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக மலையாள நடிகைகள் உள்ளிட்டோர் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் முறையிட்டனர். இதையடுத்து, வழக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றப்பட்டது. நடிகர் திலீப், இயக்குநர் நாதிர்ஷா ஆகியோரிடம் விசாரணை நடத்திய எஸ்ஐடி, 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடிகை திலீப்பை கைது செய்தது.

 

நடிகர் திலீப்புக்கு எதிராக மலையாள திரையுலகில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் அவர் வகித்த மலையாள திரைப்பட சங்க பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஏறத்தாழ 85 நாட்கள் சிறை வாசத்திற்கு பின் நடிகர் திலீப் ஜாமீனில் வெளிவந்தார். எனினும், சிபிஐ விசாரணை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நீதிபதி ஹனி வர்கீஸ்-ஐ வழக்கின் தனி நீதிபதியாக நியமித்து கேரள அரசு உத்தரவிட்டது.