9 இடங்களில் வெயில் சதம்..!

மிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதிகபட்சமாக வேலூரில் நேற்று 104 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் சுட்டெரித்தது. இதேபோல, ஈரோடு மற்றும் கரூரில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

 

தஞ்சாவூரில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயிலும், மதுரை மற்றும் சேலத்தில் தலா 101 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கும் வெப்பம் கொளுத்தியது. கோவை, திருப்பத்தூர், திருத்தணியில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் வாட்டியது.இதனிடையே, மதுரையில் குப்பை சேகரித்துக் கொண்டிருந்த மாநகராட்சி ஊழியர் மணிவேல் என்பவர், வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து, தலையில் அடிபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இந்நிலையில் தமிழ்நாட்டில் வரும் 1ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக, தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

 

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 4ஆம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம், 25 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.