அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை புறக்கணித்தது ஏன்? – திருமாவளவன் பதில்
தன்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்ப்பதாகவும், யாதும் உணர்ந்தே அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை புறக்கணித்ததாகவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் இன்று பங்கேற்கவிருக்கிறார் என்பது ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இருந்ததாகக் கூறியுள்ளார்.
ஆனால், திடீரென ஒரு தமிழ் நாளேடு இதனை பெரிய செய்தியாக வெளியிட்டு, ஒரு நூல் வெளியீட்டு விழாவைப் பூதாகரப்படுத்தி அதனை அரசியலாக்கியதாக சாடியுள்ளார்.எதிரும் புதிருமாக அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் தலைவர்கள் கூட ஒரே மேடையில் நிற்பதும் தவிர்க்கமுடியாதது தானே என்று கூறியுள்ள திருமாவளவன், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் நின்றபோதும் அந்த நாளேடு அப்படித்தான் தலைப்புச் செய்தி வெளியிட்டதா என்று கட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்.
தன்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், எங்ஙனம் தான் அதற்கு இடம் கொடுக்க இயலும் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.மேலும் பொதுமக்கள் நம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வதே தற்போதைய நமது முதன்மையான கடமை என்று கூறியுள்ள திருமாவளவன், யாதும் உணர்ந்தே தவிர்த்தோம்… பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




