புஷ்பா 2 சிறப்பு காட்சி : கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி..!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், புஷ்பா-2 திரைப்படம் பார்க்க திடீரென்று வந்த அல்லு அர்ஜூனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
அல்லு அர்ஜூனின் புஷ்பா-2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், நேற்றிரவு 9.30 மணிக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.
இதனை காண, ஹைதராபாத்தில் சிக்கட்பள்ளி என்ற இடத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ஏராளமான ரசிகர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். அப்போது, புஷ்பா-2 படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன், முன்னறிவிப்பின்றி திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜூனின் வருகையை அறிந்த ரசிகர்கள், திரையரங்கிற்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், கணவர் மற்றும் மகனுடன் சென்ற 35 வயது மதிக்கத்தக்க பெண் மயங்கி விழுந்தார்.
மயங்கி விழுந்த பெண்ணிற்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். அவரது மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திரையரங்கிற்கு வெளியே கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது, பலத்த பாதுகாப்புடன் அல்லு அர்ஜூன் உள்ளே படம் பார்த்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




