நாம் தமிழர் வேட்பாளருக்கு தமிழே தகராறு..!
தமிழ், தமிழினம் என்றெல்லாம் மேடைதோறும் கர்ஜித்து வருபவர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். நரம்பு முறுக்கேறி ஆவேசமாக மேடைகளில் முழங்கும் சீமானின் ஆங்கிலக் கலப்பில்லாத தமிழ்ப் பேச்சை கூட்ட தனி கூட்டமே உள்ளது.
அப்பேர்பட்ட சீமானுக்கோ, தமிழ் படிக்க தெரிந்த பேசத் தெரிந்தவர்களை தனது வேட்பாளராக நிறுத்த முடியாமல் போனதுதான் சோகம். ஆமாம், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கவுசிக் (27) தான் தனக்கு தமிழ் படிக்க வராது என்று சொல்லி, அதிர வைத்தவர். விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது கட்சியினருடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற கவுசிக்கை, உறுதிமொழிப் படிவம் வழங்கி, அதை வாசிக்குமாறு ஆட்சியர் கூறினார்.
அப்போது, தனக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது என்று கூற, உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் வாசிக்க, அதனை வேட்பாளர் கவுசிக் பின்தொடர்ந்து கூறி உறுதிமொழியை ஏற்றார்.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள மேலக்கலங்கலைச் சேர்ந்தவர் சி.கவுசிக் (27). மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறையின் மாவட்டச் செயலாளரும் கூட. மருத்துவர் கவுசிக்கின் பெற்றோர் வட மாநிலத்தில் வசிக்கின்றனர். கவுசிக் அங்கு படித்ததால் அவருக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது; பேச மட்டுமே தெரியும் என்று கூறி தம்பிகள் சமாளித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




