தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறும் மாபெரும் கொரொனா தடுப்பூசி முகாம்..!
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறும் மாபெரும் கொரொனா தடுப்பூசி முகாமில் சென்னையில் மட்டும் மூன்றரை லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரொனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தி கொரொனா தடுப்பூசி போட தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் மட்டும் ஆயிரத்து 500 முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று சென்னையில் 400 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. செப்டம்பர் ஒன்பதாம் தேதி நிலவரப்படி சென்னை மாநகராட்சி மூலம் 43 லட்சத்து 70 ஆயிரத்து 309 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இன்று சென்னையில் மூன்றரை லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயித்து உள்ள மாநகராட்சி நிர்வாகம் இந்த பணிகளில் தலா 600 மருத்துவர்களையும், செவிலியர்களையும் ஈடுபடுத்த உள்ளது .தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுக்காக அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட 1,800 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






