6 மணிநேர ஆன்லைன் வகுப்பால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!
ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை முதல்வர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு மன உளைச்சலையும், உடல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆன்லைன் வகுப்புகளுக்கு மொபைல்போன், லேப்டாப் போன்ற கருவிகளை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். காலை முதல் மாலை 6 மணி நேரம் வரை நடக்கும் ஆன்லைன் வகுப்புகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பையா கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதேநேரம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை முதல்வர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு உள்ளனர்.






