சிவகங்கை மாவட்டத்தில் கடன் கொடுப்பதாக கூறி பண மோசடி செய்த 2 நபர்கள் கைது!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்திரத்தார் வீதியில் உள்ள சத்திரத்தார் வீட்டை திருப்பத்தூரை சேர்ந்த பெரியசாமி என்பவர் சினிமா படப்பிடிப்பிற்கு வாடகைக்கு வேண்டுமென்று வீட்டை வாடகைக்கு எடுத்து கொண்டு தன்னை ஒரு பெரிய ஜமீன்தார் போன்று அடையாளப்படுத்தி சொத்து பத்திரம் கொடுத்தால் அதற்கேற்ப கோடிக்கணக்கில் பணத்தை லோன் தருவதாக கூறி 01.06.2020 அன்று புதுக்கோட்டை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரிடம் ரூ. 5 கோடி கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்கு முன்பணம் தர வேண்டும் என்று கூறி ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தார்.
இதைத்தொடர்ந்து நாகராஜன் பெரியசாமியிடம் கடன் தொகையை கொடுக்குமாறும் இல்லையென்றால் தன்னிடம் பெற்ற பணத்தை திரும்பத் தருமாறு கேட்டபோது பெரியசாமி மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து நாகராஜனை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நாகராஜன் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ராஜகோபால் உத்தரவின் பேரில் தேவகோட்டை உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மேற்பார்வையில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் பேபிஉமா தலைமையிலான தனிப்படை போலீசார் 02.062020 அன்று பெரியசாமி மற்றும் சுந்தரபாண்டியன் ஆகியோர் மீது u/s. 420, 294(b), 506(I) IPC – ன் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.






