உலகை உலுக்கிய சிங்கங்களின் புகைப்படம்!

பார்ப்பவர்களை எல்லாம் குலைநடுங்க வைக்கும் சிங்கத்தின் இந்தக் காட்சிதான் இன்று உலகமெங்கும் உள்ளவர்களை கண்கலங்க வைத்துள்ளது. வனத்தின் ராஜாவாக உலாவரும் சிங்கங்களை இந்த நிலையில் பார்க்கும்போது கண்கள் தானாகவே ஈரமாகின்றன.

 

இப்படி ஒவ்வொருவரையும் கலங்கடிக்கும் நிகழ்வு நடந்துள்ளது சூடான் நாட்டில் தான். சூடானில் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை என நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருகின்றன. இதனால் தலைநகரில் உள்ள அல் குரோஷி விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் எலும்பும் தோலுமாக உயிர் வாழ்ந்து வருகின்றன.

இந்த கொடூரத்தை பார்த்தவர்கள் புகைப்படமாக எடுத்து வெளியிட உலக மக்களின் பார்வை சூடான் பக்கம் திரும்பியுள்ளது. ஏற்கனவே அரசால் நிர்வகிக்க முடியாமல் தனியார் நிதி உதவியுடன் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட ஊட்டச்சத்து இல்லாமலும் போதிய உணவின்றி தவித்து வருகின்றன அந்த சிங்கங்கள்.

 

இந்தப் பூங்கா மட்டுமல்லாமல் சூடானில் உள்ள பல்வேறு பூங்காக்களில் உள்ள விலங்குகளின் நிலையும் இதுதான் என கண்ணீர் வடிக்கின்றனர் விலங்குகள் நல ஆர்வலர்கள் . இப்படி வறட்சியின் கோரப் பிடியில் சிக்கியுள்ள விலங்குகளை காப்பாற்றும் முயற்சியாக இணையதளத்தில் சூடான் அணிமல் ரேஸ்கியூ ஹேஸ்டேக்கை உருவாக்கி உதவ முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

அண்மையில் ஜிம்பாப்வேயில் யானை துடிதுடிக்க உயிரிழக்கும் காட்சிகள் மனதை உலுக்கிய நிலையில் சூடான் சிங்கங்களின் நிலையும் பார்ப்போரை பதற வைக்கின்றன. லெபனான் சூடான் சிம்பாப்வே ஆபிரிக்க நாடுகள் வளர்ச்சியால் திக்குமுக்காடி வரும் சமயத்தில் உலக நாடுகளின் கவனம் ஆப்பிரிக்கா பக்கம் திரும்ப வேண்டியது கட்டாயம்.


Leave a Reply