தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி மின்னொளியால் ஒளிர்ந்தது. வேளாங்கண்ணி ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியினை பேராலய அதிபர் பிரபாகர் நிறைவேற்றினார்.
அதனை தொடர்ந்து இயேசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை இயேசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர் குழந்தை இயேசு பிறக்கும் போது ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். புகழ்பெற்ற சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அதேபோல் பெசன்ட்நகர் தேவாலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்தனர். குழந்தை இயேசு மாட்டு தொழுவத்தில் பிறந்ததை நினைவுகூறும் வகையில் ஆலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. விழாவையொட்டி அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன.
தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கிறிஸ்மஸ் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். முன்னதாக கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இளைஞர்கள் கேரல் சர்வீஸ் நடைபெற்றது.
இதில் பல்வேறு வாகனங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அதில் யேசுபாலன் பிறப்பை குறிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு கிறிஸ்மஸ் பாடல்களை பாடி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள மைக்கேல்ஸ் தேவாலயத்தில் மறைமாவட்ட ஆயர் தாமஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்து பிறப்பின் பெருமைகளைச் சொல்லும் வகையில் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு குழந்தை இயேசுவை தொட்டிலில் கிடக்கும் நிகழ்ச்சி இரவு 12 மணிக்கு நடத்தப்பட்டது.
இதை தொடர்ந்து அங்கு குழுமியிருந்த கிறிஸ்தவர்கள் உலக அமைதி மற்றும் சமாதானம் வேண்டி சிறப்பு ஆராதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து புத்தாடை அணிந்து வந்திருந்த கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை விடியவிடிய நடைபெற்றது. கிறிஸ்து பிறப்பை பறைசாற்றும் வகையில் பல லட்சம் செலவில் பொருட்களாலான குடில் குழந்தை இயேசு சொருபங்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தது.