உன்னாவ் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்: மக்களவையில் அமளி

உன்னாவ் பாலியல் வன்கொடுமையில் சிக்கிய பெண் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட விவகாரத்தில் சீதை கதையுடன் தொடர்புபடுத்தி மக்களவையில் காங்கிரஸ் எம்பி ஆதி ரஞ்சன் சவுத்ரி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

மக்களவையில் பேசிய காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உத்தரப்பிரதேசத்தில் ராமருக்கு கோயில் கட்ட முயற்சி நடக்கும் அதேவேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள் என்றார்.

 

உன்னாவ் சம்பவத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை தீ வைத்து எரிக்க முயற்சித்த சம்பவம் குறித்து பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தை உத்தம பிரதேசமாக்குவோம் என கூறியவர்கள் அது அதர்ம பிரதேசமாக்கி இருப்பதாக கூறினார்.

 

இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தரப்பில் சிலர் பேசியதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. பின்னர் பேசிய அமைச்சர் ஸ்மிருதி இராணி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகளை மத ரீதியாக தொடர்புபடுத்தி பேசுவது துரதிஷ்டவசமானது என்றார்.

 

மேற்கு வங்கத்தில் மால்டாவில் இதே போன்ற கொடுமை நடந்த போது எதிர்க்கட்சியினர் வாய் திறக்கவில்லை என்ற அவர் பாலியல் வன்கொடுமை. கொலை. தீ வைப்பு ஆகிய பெண்களுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற குற்றங்களை அனைவரும் ஒரே குரலில் கண்டிக்க வேண்டுமே தவிர மதரீதியாக பேசக் கூடாது என்றார்.

 

அப்போது காங்கிரஸ் எம்பிக்கள் ஆவேசமாக பேசியவாறு அவையின் மையப் பகுதியை நோக்கி முன்னேறினர். இதையடுத்து சூழலை கட்டுப்படுத்துவதற்காக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் அமைச்சரை மிரட்டும் வகையில் நடந்து கொண்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என பாஜக எம்பிக்கள் வலியுறுத்தினர்.


Leave a Reply