சேலம் அருகே மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆட்டையாம்பட்டி அருகே உள்ள நைனா பட்டி கிராமத்தை சேர்ந்த அக்கா, தம்பி உறவு முறை கொண்ட ராஜாவும், மீனாவும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு குழந்தை பிறந்த நிலையில் மீனாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதுடன் மன நலப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் மீனாவின் பெற்றோர் குழந்தையை தங்களது உறவு பெண்ணிடம் கொடுத்து உள்ளனர். இந்நிலையில் தமது பெற்றோர் குழந்தையை மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டதாக மீனாவும், ராஜாவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தி ஒரே நாளில் குழந்தையை மீட்ட போலீசார் குழந்தை பணத்திற்காக விற்பனை செய்யப்படவில்லை என்பதையும் கண்டறிந்தனர். இதையடுத்து காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த குழந்தையை பெற்றோர்களான ராஜா மீனாவிடம் சமூகநலத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.