மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவும், இசையமைப்பாளர் இளையராஜாவும் சந்தித்துக் கொண்ட சம்பவம் தேனியில் நிகழ்ந்துள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிராஜாவும், இளையராஜாவும் 1980களில் பல்வேறு திரைப்படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.
மண் வாசனையோடு எடுக்கப்படும் பாரதிராஜாவின் திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. சிறு வயது முதலே நண்பர்களாக இருந்த இவர்களுக்குள் 1992 ஆம் ஆண்டு மன கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரும் இணைந்து பணி புரிவதை தவிர்த்து வந்தனர்.
அதோடு இருவரும் பேசிக் கொள்வதையும் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் இருவரும் தேனியில் சந்தித்து ஒரே காரில் பயணித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.