பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு எஸ்.பி.ஐ கட்-ஆஃப் மதிப்பெண்கள் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26ஆம் தேதி கோவையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியை முற்றுகையிட உள்ளதாக அனைத்து கட்சியினர் அறிவித்துள்ளனர்.இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று காலை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுசெயலாளர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு தமிழக மக்கள் மற்றும் தமிழக எதிர்க் கட்சியினர் யாரும் ஏற்காத பட்சத்தில் தற்போது எஸ்.பி.ஐ குமாஸ்தா தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 28 மார்க் மட்டுமே எடுத்தால் தேர்ச்சி பெறலாம் என்று ஒதுக்கீடு வழங்கி உள்ளது.
இது மற்ற 97 சதவீத மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. ஏற்கனவே வங்கிகளில் 50 சதவீதத்திற்கு மேல் உயர்சாதியினர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசின் சூழ்ச்சியால் மேலும் உயர் சாதியினரை மட்டுமே பணியில் நிரப்பும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கூடாது.
இது தொடர்பாக வரும் 26ம் தேதி ரயில் நிலையம் அருகே உள்ள SBI அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அனைத்து கட்சியினர் சார்பில் நடைபெற உள்ளது.இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , புரட்சிகர இளைஞர் முன்னணி, திராவிட தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை , மே 17 இயக்கம் , தமிழர் விடியல் கட்சி, தமிழ் புலிகள், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.