8 ஆண்டுகளுக்கு முன்னாள் நடைபெற்ற கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் ஆள்மாறாட்டம் செய்து தப்ப முயன்றது பொன்மாணிக்கவேல் தலைமையிலான விசாரணையில் கண்டுபிடிக்கபட்டது. தர்மபுரி மாவட்டம் பட்டவர்த்தி என்ற கிராமத்தை சேர்ந்த சின்னசாமி கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அடித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ராமு, பாலு, கிரிஷ்ணன் ஆகியோரும் மீனாட்சி, வளர்மதி, மீனாட்சி ஆகிய இரண்டு பெண்களும் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற விசாரணையில் தான் ஒரு ராணுவ வீரர் என்றும் கொலை நடந்த அன்று பணியில் இருந்ததாகவும் கூறி தண்டனையில் இருந்து தப்பினார் கிரிஷ்ணன். அதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த அவர் தன்னை போலவே தன் சகோதரர்கள் ராமு மற்றும் பாலு ஆகியோருக்கு கொலையில் எந்த தொடர்பும் இல்லை என வழக்கு நடத்தி வந்தார்.
பல குழப்பங்களுக்கு மத்தியில் இவ்வழக்கின் மறு விசாரணைக்கு பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்தது நீதிமன்றம். இதையடுத்து தர்மபுரிக்கு நேரில் சென்ற பொன் மாணிக்கவேல் தனது பாணியில் வழக்கை கையாண்டார். கிரிஷ்ணனின் புகைப்படத்தை காண்பித்து விசாரித்த போது அதில் இருந்தவர் கிரிஷ்ணன் இல்லை எனவும் அவரின் அண்ணன் ராணுவத்தில் இருக்கும் கோவிந்தசாமி என்றும் தெரிய வந்தது.
திகைத்து போன விசாரணை அதிகாரிகள் உண்மையான கிரிஷ்ணன் யார் என்ற விசாரணையில் ஈடுபட்டபோது வழக்கில் நடந்த ஆள்மாறாட்டம் தெரிய வந்தது. கொலை வழக்கில் தொடர்புடைய கிரிஷ்ணன் 2012 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற அதிர்ச்சி தகவலும் விசாரணையில் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதில் கிரிஷ்ணனின் அண்ணன் கோவிந்த சாமி சாமர்த்தியமாக ஆடிய சதுரங்க ஆட்டம் அம்பலமானது.
வயது மூப்பு காரணமாக ராணுவத்தில் சேரும் தகுதியை இழந்த கோவிந்தசாமி தனது தம்பி கிரிஷ்ணனின் பள்ளி சான்றிதழ்களில் தனது புகைப்படத்தை மாற்றி ஆள்மாறாட்டம் செய்துள்ளார். அந்த பெயரில் சுமார் 26 போலி ஆவணங்களை தயாரித்த அவர் அதை வைத்து 2006 ஆம் ஆண்டு ராணுவ பணியில் சேர்ந்ததும் நடந்துள்ளது.
கொலை வழக்கில் இருந்து தப்பிக்க திட்டமிட்ட கோவிந்தசாமி காவல் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும், பலரை பொய் சாட்சி சொல்ல வைத்து இருப்பதும் பொன் மாணிக்க வேல் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர் விசாரணையில் கிரிஷ்ணன் எனும் பெயரில் ராணுவ வீரராக இருந்த கோவிந்தசாமி தற்போது கப்பா என்ற பெயரில் ஆந்திராவின் சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.