ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் புரோட்டோகால் என்னும் விதிமுறைகளை மீறும் வகையில் நடந்து கொண்டு உள்ளார். பாகிஸ்தான் ஆளும் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் இம்ரான் கான் பங்கேற்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
புரோட்டோகால் எனும் விதிமுறைகளை மீறும் வகையில் இம்ரான்கான் நடந்து கொண்டதும் அதில் பதிவாகியுள்ளது. உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்க வந்த அரசு தலைவர்கள் நின்ற படி அடுத்தடுத்து வரும் அரசு தலைவர்களுக்கு வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் இந்த நெறிமுறைக்கு மாறாக இம்ரான்கான் நேராக சென்று தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து அதை உணர்ந்து எழுந்து நிற்கும் இம்ரான்கான் மீண்டும் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டார். அண்மையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க சௌதி அரேபியா சென்ற போதும் இம்ரான்கான் நெறிமுறைகளை மீறியதாக கண்டனம் எழுந்தது.
சௌதி மன்னரிடம் பேசிய இம்ரான்கான் மன்னரை பார்த்து பேசாமல் அவரது மொழி பெயர்ப்பாளரிடம் பேசினார். மேலும் தான் கூறியதை மொழி பெயர்ப்பாளர் மன்னரிடம் எடுத்து உரைக்கும் முன்னரே இம்ரான்கான் வெடுவெடு வென்று நடந்து சென்று விட்டார்.