சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், ஆ. ராசா தலைமையில் ஊர்வலமாக சென்று திமுகவினர் வாக்கு சேகரித்தனர். பகுத்தறிவு பேசிவரும் திமுகவினர், ஜக்கம்மா குறி சொல்வது போல் வாக்கு சேகரித்தது, வேடிக்கையாக இருந்தது.
கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து, திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சூலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்துப்பாளையத்தில், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தை, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா துவக்கி வைத்தார்.
இந்த பேரணி, ஆர்.கே.மில் சாலை, சோமனூர் பேருந்து நிலையம், செல்வபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்றது. பேரணியின்போது, உதயசூரியனுக்கு வாக்களிக்க வலியுறுத்தி பெண்கள் கோஷமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஒருவர், குடுகுடுப்பைக்காரர் போல் வேடமிட்டு, குடுகுடுப்பையுடன் ஜக்கம்மா ‘குறி’ சொல்வது போல், ஜி.எஸ்.டி வரி குறையணுமா… நாடு நாசமாகாம இருக்கணுமா… திமுகவுக்கு ஓட்டுப்போடுங்க என்றவாறு கூறிச் சென்றார். பகுத்தறிவு பேசும் திமுகவினர், ஜக்கம்மா குறி சொல்வது போல் வாக்கு கேட்பது என்னவகை பகுத்தறிவோ என்று சிலர் பேசிக் கொண்டனர்.
இந்த ஊர்வலத்தில், திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தன்,திருப்பூர் மாநகர செயலாளர் நாகராஜ் மற்றும் மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.