அடுத்தடுத்த குண்டு வெடிப்புகளால் அண்டை நாடானா இலங்கையில் பதற்றம் தொடரும் நிலையில், அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அவரச கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இலங்கையில் நேற்று முன்தினம் தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தலைநகர் கொழும்புவில், தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிபர் சிறிசேனா தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. அதில், இலங்கையில் அவசரநிலையை பிரகடனம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டு, நேற்று நள்ளிரவு முதல் அது அமலுக்கு வந்தது.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது. குண்டு வெடிப்பு சம்பவம், அதன் பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இலங்கை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.