அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்..!
கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் அருகே அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இன்று மதியம் அங்கன்வாடி மையத்தில் உணவருந்திய 17 குழந்தைகளுக்கு அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்படவே அனைவரும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்து கிடந்தது தெரிய வந்த நிலையில் பணியாளர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.






