பெரம்பூர் செல்லும் பேருந்தில் பயணித்த முதலமைச்சர் விஜய்..!
அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 300 புதிய பேருந்துகளின் சேவையை தலைமைச் செயலக வளாகத்தில் இருந்தபடி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து புதிய பேருந்துகளை ஆய்வு செய்த விஜய் பெரம்பூர் செல்லும் பேருந்தில் பயணித்தார். தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம், விழுப்புரம் மற்றும் கும்பகோணம் ஆகிய 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் 300 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இந்த 300 புதிய பேருந்துகளில் 164 டீசல் பேருந்துகள் மற்றும் 136 சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 300 புதிய பேருந்துகளின் சேவைகளை இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து புதிய பேருந்துகளை முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார். 300 புதிய பேருந்துகள் அனைத்தும் சென்னை காமராஜர் சாலையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
புதிய பேருந்துகளை ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய் பெரம்பூர் செல்லும் 29 A பேருந்தில் பயணித்தார். பொதுமக்களைப் பார்த்து கையசைத்தபடி சுமார் 4 கி.மீ இந்த பேருந்தில் பயணித்த முதலமைச்சர் விஜய் தனது மொபைலில் வீடியோ எடுத்தார். இதையடுத்து அதே பேருந்தில் மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு முதலமைச்சர் விஜய் வந்தடைந்தார்.





