ஆன்லைன் ரம்மி விளையாட்டு எப்போது தான் தடை செய்யப்படும்..!
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்டத்தை இயற்றுமாறு இன்னும் எத்தனை காலம் தேவைப்படும் என்று தமிழக அரசு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அதற்கு தடை விதிக்க கோரி மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆன்லைன் ரம்மி தடை செய்வதற்காக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
இதையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நாள்தோறும் அப்பாவிகள் உயிரிழப்பு தொடர்வதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்டத்தை இயற்றுவதற்கு இன்னும் எத்தனை காலம் தேவைப்படும் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து வரும் 24-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.






