ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைக்க செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை அவகாசம்!
ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைக்க வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் எண்ணை இணைக்காததால் யாருக்கும் ரேஷன் பொருட்களை வழங்க மறுக்கக் கூடாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
போலி ரேஷன் கார்டு வைத்திருப்பதை தடுக்க அதனை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆதாரோடு குடும்ப அட்டை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆதார் கார்டுகளை பெறும்போது கைரேகை, தனி நபர் கண்ணின் கருவிழி உள்ளிட்ட தகவல்கள் தரப்படுவதால் போலி குடும்ப அட்டையை வைத்திருப்பது தடுக்கப்படுகிறது. அதுபோல ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் அனைத்து விவரங்களும் குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டு இரண்டும் ஒப்பீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






