தக்காளி விலை திடீர் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையக்கூடிய கேரட், பீட்ரூட், டர்னிப், காலிப்பிளவர், உருளைகிழங்கு, பட்டாணி, நூல்கோல், உள்ளிட்ட பல்வேறு மலைக்காய்கறிகளையும் தரைப்பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், அவரை, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளையும் கொள்முதல் செய்து தினசரி காய்கறி சந்தையில் வியாபாரிகள் விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில் நாள்தோறும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தொலைதூர மாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதாலும் கொடைக்கானலில் உள்ள தினசரி காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ஒன்றிற்கு 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதால் காய்கறி வாங்க வந்த இல்லத்தரசிகளும், உணவு விடுதி உரிமையாளர்களும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் இந்த திடீர் விலையேற்றத்திற்கு, தக்காளி கொள்முதல் பொதுவாக குறைந்துள்ளதுடன், மலைப்பகுதிக்கு லாரி கட்டணம் மற்றும் ஏற்றுக்கூலி இறக்கு கூலியும் அதிகம் என வியாபாரிகள் காரணம் தெரிவிக்கின்றனர். அதிலும் குறைந்த அளவு மட்டும் தான் வெளி சந்தையில் கிடைப்பதால் அதை மட்டும் கொள்முதல் செய்து தற்போது தினசரி சந்தையில் விற்பனை செய்வதாகவும், வெயில், மழை என காலநிலை திடீரென மாறுபடுவதால் மொத்தமாக கொள்முதல் செய்தால் சில நாட்களில் மொத்தமாக அழுகி விடுவதால் அதிகமாக கொள்முதல் செய்வதற்கு ஆர்வமில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
தக்காளி திடீர் விலையேற்றத்தால் தக்காளி ரசம் மற்றும் தக்காளிகளில் செய்யப்படும் உணவுகளுக்கு திண்டாட்டம் ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது, தக்காளி விலையேற்றத்தினால் கவலையடைந்துள்ள இல்லத்தரசிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மாவட்ட நிர்வாகம் குறைந்தவிலைக்கு தக்காளி கிடைக்க ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.





