காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஃபெயில் ஆன மாணவர்களும் பாஸ்!
பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு களில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அனைவரும் தேர்ச்சி தான் என தேர்வுத் துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கொரொனா பரவலைத் தொடர்ந்து தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட்டது, மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல், கணக்குபதிவியல் ஆகிய தேர்வுகள் ரத்தானதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பில் விடுபட்ட பாடங்களில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அரசாணை வெளியிடப்பட்டதையும் மாணவர்களின் மதிப்பெண் காலாண்டு, அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்பட உள்ளன.
இந்த அரசாணையின் படி, மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள் எனக்கூறி இருக்கும் தேர்வுத்துறை இயக்குனர் இந்த விவரத்தை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.






