நீட் தகுதித் தேர்வில் ஒடிசாவை சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்..!
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதித் தேர்வில் ஒடிசாவை சேர்ந்த சோயிப் ஆப்தா என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். நாடு முழுவதும் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வை 13 லட்சத்து 66 ஆயிரத்து 945 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர்.
தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஒடிசாவை சேர்ந்த சோயிக் ஆப்தா 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். இதுவரை நடத்தப்பட்ட நீட் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் ஆகும். டெல்லி மாணவி அகன்சா சிங்கும் 720 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 710 மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் எட்டாம் இடம் பிடித்தார். அரசு பள்ளி மாணவர்களில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜீவித்க்குமார் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு எழுதியவர்களில் 7 லட்சத்து 71 ஆயிரத்து 500 பேர் தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 56.44 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவாகும். சென்ற ஆண்டில் 56.50 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 48.57 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு 57.44 ஆக அதிகரித்துள்ளது.







