உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இன்று தொடக்கம்..!
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க இருக்கும் நிலையில், முகாம் நடத்துவதற்கு முன்பாக தன்னார்வலர்கள் மூலம் மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா தெரிவித்துள்ளார்.
மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அரசின் சேவைகளை கொண்டு செல்லும் விதமாக ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது.
இந்த திட்டம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா, ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் சிதம்பரத்தில் தொடங்கி வைக்க இருப்பதாகக் கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் 3738 முகாம்கள், ஊரகப் பகுதிகளில் 6232 முகாம்கள் என நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும், நகர்ப்புறத்தில் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் 46 சேவைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஆவணங்களை முறையாக மக்கள் கொண்டுவந்தால் உடனடியாக மனு மீது தீர்வு காணப்படும் என்றும் அமுதா கூறினார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களும் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பெறப்படும் என்றும் மகளிர் உரிமைத் தொகை பெறாத பெண்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகாம்களில் கொடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.
முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று கூறிய அமுதா, இந்தத் திட்டத்திற்காக பிரத்யேகமாக “உங்களுடன் ஸ்டாலின்” இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.





