வாக்காளர் பட்டியலில் சசிகலா, இளவரசி பெயர்கள் மிஸ்ஸிங்!
நாளை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், சசிகலா, அவரின் சகோதரர் மனைவி இளவரசி ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, அமமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து, சென்னை திரும்பினார். சட்டசபை தேர்தல் நடக்கும் சூழலில் தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியலே வேண்டாமென்று சசிகலா ஒதுங்கிக் கொண்டார்.
இந்த சூழலில், தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இச்சூழலில் சசிகலா, அவரின் சகோதரர் மனைவி இளவரசி ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, அமமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சியும் வேண்டுமென்றே இவ்வாறு செய்துள்ளதாக, அமமுகவினர் தெரிவிக்கின்றனர்.
சசிகலாவின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து இவ்வாறு நீக்குவது இது முதல் முறையல்ல. கடந்த மக்களவை தேர்தலிலும் இவர்கள் இருவரின் பெயர்களும் போயஸ் தோட்டத்து இல்லத்தில் வசித்துவந்த சிலரின் பெயர்களும் நீக்கப்பட்டிருந்தன என்பது, அவர்களின் குற்றச்சாட்டு ஆக்கும்.
ஆனால், அதிகாரிகள் கூறுகையில், வார்டு வரையறை பணியின் போது, சம்பந்தப்பட்ட வீட்டில், வாக்காளர்கள் இல்லையென்பதால் பெயர் நீக்கப்பட்டிருக்கலாம். சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, எந்த முகவரியில் வசிக்கிறோம் என மீண்டும் விண்ணப்பித்தால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் சசிகலா பெயர் இடம்பெறவில்லை. சிறையிலிருந்து வந்த பிறகும் அவர் விண்ணப்பிக்காததால், அவரது பெயர் விடுபட்டுள்ளது.





