அரசு ஊழியர்களுக்கு ரேஷனில் அரிசி வழங்கப்படமாட்டாதா..?
அரசு ஊழியர்கள் அதிக ஆண்டு வருமானம் உள்ளோர், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு ரேஷனில் அரிசி வழங்கப்படமாட்டாது என வெளியான செய்தியை தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுபற்றி கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கும், ஒரு லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போருக்கும் மூன்று அறைகள் கொண்ட வீட்டில் குடியிருப்பவர்களுக்கு பொதுவிநியோகத் திட்ட அரிசி இல்லை என்று பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன.
இது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் தெரிவித்த கூடுதல் தலைமை செயலாளர் இதில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவிவரும் இதுகுறித்த செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.







