சிறுமியை கொலை செய்த நபருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி உறவினர்கள் போராட்டம்
திருவள்ளூர் ஆவடி அருகே சிறுமியை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடைபெற்றது.
திருமுல்லைவாயில் அருகே உள்ள அண்ணனுரில் 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடியதாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீனாட்சிசுந்தரம் மற்றும் அவரது மனைவி ராஜம்மாள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் வழக்கில் வாய்தாவிற்காக கணவன், மனைவி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது மீனாட்சிசுந்தரம், ராஜம்மாள் தம்பதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட குழந்தையின் உறவினர்கள் வாயில் கருப்பு துணி கட்டி நீதிமன்ற வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருவருக்கும் அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.






