ஒரே காரில் பயணித்த ஓபிஎஸ் – செங்கோட்டையன்..!
பசும்பொனில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் – செங்கோட்டையன் ஒரே காரில் பயணித்த நிலையில் அதுகுறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்க மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்தனர். ராமநாதபுரம் வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையனுக்கு அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எடப்பாடி பழனிசாமி உடன் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு தெரியவில்லை, வந்தால்தான் தெரியும் என ஈபிஎஸ் பதில் அளித்தார்.





