அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்த அதிகாரிகள்..!
புதுச்சேரி இளைஞர் ஹேமச்சந்திரன் உடல் பருமனை குறைப்பத்திற்கான அறுவை சிகிச்சையின் பொழுது உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த குழு மருத்துவமனை நிர்வாகத்திடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை நகரை சேர்ந்த ஹேமச்சந்திரன் கடந்த 23ஆம் தேதி சென்னையை அடுத்த பம்மலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் உடல் பருமனை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை செய்து கொண்டார்.
அறுவை சிகிச்சையின் பொழுது ஹேமச்சந்திரன் உயிரிழந்ததாக அவருடைய பெற்றோர் புகார் அளித்தனர். இதன்பின் தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மருத்துவத்துறை இணை இயக்குனர் கீர்த்த லிங்கம் தலைமையில் இரண்டாவது முறையாக மருத்துவமனையில் விசாரணை நடைபெற்றது.
உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மூளைச்சலவை செய்ததாகவும் கட்டணம் குறைவு என்பதால் திட்டமிட்ட இடத்திலிருந்து மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதாகவும் ஹேமச்சந்திரனின் பெற்றோர் கூறியிருந்தனர்.
இதன் அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்களிடம் தமிழக அரசு குழு கேள்விகளை விசாரணையில் முன்வைக்க உள்ளது.
அறுவை சிகிச்சை மேற்கொள்ள கட்டாயப்படுத்தும் நிலை இருந்ததா? சிகிச்சையின் பொழுது என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது போன்ற கேள்விகளும் இதற்கு முன் மருத்துவமனையில் இது போன்ற சிகிச்சை நடைபெற்றதா என்று கோணத்திலும் விசாரித்துள்ளனர். முழுமையாக விசாரணை செய்து விரைவில் அறிக்கையை மருத்துவத்துறை அமைச்சரிடம் தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தனர்.





