மெஸ்ஸியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி..!
நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி மேற்கு வங்கத்துக்கு வந்த நிகழ்வில் ஏற்பட்ட அசம்பா விதத்திற்காக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். தவறான நிர்வாக முறைகளால் இந்த சம்பவம் நடந்திருப்பதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்தாட்ட வீரரான லயோனல் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு வருகை தந்துள்ளார். அங்கு லேக் டவுன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அவரது 70 அடி உயர சிலையை மெஸ்ஸி காணொளி காட்சி வாயிலாக திறந்தார்.
இந்தியாவிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் மெஸ்ஸிக்கு உள்ளார்கள். அவர் வருகிறார் என்று தெரிந்ததும் மேற்கு வங்கத்திற்கு மற்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் சென்று குவிந்துள்ளனர்.
மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சி மேற்கு வங்கத்தில் உள்ள சால்ட் லேக் என்ற மைதானத்தில் நடத்தப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக மெஸ்ஸியை பாதுகாப்பு வீரர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால் ரசிகர்களால் மெஸ்ஸியை சரியாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மைதானத்தை சூறையாடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அங்குள்ள சேர்கள், கூடாரங்கள் உள்ளவற்றை ரசிகர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் அசம்பாவிதம் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடந்த அசம்பாவிதத்திற்காக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பட்ட சம்பவம் எனக்கு அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. தவறான நிர்வாகத்தின் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மெஸ்ஸி மீது பேரன்பு கொண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் நானும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
நடந்த மோசமான நிகழ்வுக்காக லியோனல் மெஸ்ஸியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த அசம்பாவிதம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அர்ஷின் குமார், தலைமை செயலாளர், ஊழல் தலைமைச் செயலாளர் ஆகியோரை கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது அறிக்கையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.





