Jio Hotstar நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் JioHotstar நிறுவனம் தயாரிக்கும் 40 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சாமிநாதன் மற்றும் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
ஜியோ ஹாட்ஸ்டார் நான்கு தென் மாநிலங்களில் ரூ.12,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.4,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
துவக்க நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நல்ல கருத்தாக இருந்தால், அது நிச்சயம் மக்களால் கொண்டாடப்படும். மொழி, இனம் தாண்டி, கருத்து சிறந்ததாக இருந்தால், அதற்கு அனைத்து இடத்திலும் வரவேற்பு இருக்கும்.
இன்றைய சூழலில், புதிய தொழில்நுட்பங்களை கலைஞர்கள் கற்றுக்கொள்வது அவசியம். என்ன, எப்படி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கும், அதனை எப்படி கலையாக கொண்டுவர வேண்டும் என்பதற்கும் இன்று நம்மோடு இருக்கும் கலைஞானி நடிகர் கமல் ஹாசன் மிகச் சிறந்த உதாரணம்” எனப் பேசினார்.





