காதல் மனைவி செருப்பால் அடித்ததால் கொலை செய்த கணவன்..!
வேலூர் அருகே செருப்பால் அடித்த மனைவியை கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பத்திரபள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி யுவராஜ்ஜும், சுப்புலட்சுமி என்பவரும் 9 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். கல்யாணத்திற்கு முன் இனித்த காதல் கணவன் மனைவியான பிறகு கசக்க துவக்கி இருந்தது.
இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளிக்கிழமையும் சண்டை போட்டுள்ளனர். அப்போது யுவராஜை சுப்புலட்சுமி செருப்பால் அடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ் அடுப்பூத பயன்படுத்தப்படும் இரும்பு குழாயால் சுப்புலட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுப்புலட்சுமி பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது உடலை கூராய்வுக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் சுப்புராஜை கைது செய்தனர். திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.
கருத்து வேறுபாட்டை கடந்ததுதான் காதல் என்பதை பலரும் புரிந்து கொள்ளவில்லை என்பதற்கு சுப்புலட்சுமி கொலை ஓர் எடுத்துக்காட்டு.







