இன்று குரூப்-1, குரூப்-1 ஏ முதல்நிலைத் தேர்வு..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை ஆட்சியர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்பட குரூப்-1 பணியிடங்களில் 70 காலியிடங்களும், குரூப்-1ஏ பணியிடங்களில் உதவி வனப் பாதுகாவலர் பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்படுகிறது.
மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 987 தலைமைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 170 இடங்களில் 41,094 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9.30 மணிக்குத் தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.
தேர்வு எழுதுவோர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால்டிக்கெட்டைத் தேர்வு மையத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்றும், தேர்வர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகலைக் காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வறைக்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.





